Friday, April 18, 2014

12 வகையான சிறப்பு மருத்துவ துறைகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருதய அறுவை சிகிச்சை உள்பட 12 வகையான சிறப்பு மருத்துவ துறைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முதல் அமைச்சர் திறந்தார்
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.60 கோடியே 94 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 6 மாடிகள் கொண்ட உயர் சிறப்பு மருத்துவ மையம் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று மதியம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது திருச்சி மருத்துவ மனை வளாகத்தில் இருந்த அரசு தலைமை கொறடா மனோகரன், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், பரஞ்சோதி எம்.எல்.ஏ ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி டீன் கார் குழலி, துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சம்பத், கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், செயற்பொறியாளர் கணேசன், பி.எஸ்.கே. என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்ஷன், பொறியியல் கல்லூரி பொருளாளர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 மருத்துவ துறைகள்
இந்த உயர் சிறப்பு மருத்துவ மையத்தில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை நரம்பியல் துறை, சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் நோய் அறுவை சிகிச்சை, புற்று நோய் அறுவை சிகிச்சை உள்பட 12 வகையான மருத்துவ துறைகள் இடம்பெற்று உள்ளன. இதன் மூலம் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள நவீன மருத்துவ வசதிகள் மூலம் உயரிய மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும்.

No comments:

Post a Comment