Friday, March 29, 2013

வலிப்புநோய் பற்றிய மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் பூனாட்சி பேச்சு

திருச்சி
Dinathanthi 26/3/1013

வலிப்புநோய் பற்றிய மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்று விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் பூனாட்சி கூறினார்.

வலிப்பு நோய் விழிப்புணர்வு பேரணி

வலிப்பு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மார்ச் 26–ந்தேதி உலக வலிப்பு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் துறை சார்பில் 500–க்கும் மேற்பட்ட நர்சுகள் மற்றும் நர்சிங் மாணவிகள் சீருடையுடன் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை தமிழக காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மூட நம்பிக்கை

உலக அளவில் 65 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஆயிரம் பேரில் ஆறு பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் வலிப்பு நோய் பற்றி மக்களிடம் மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றை ஒழிப்பதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியில் அரசு தலைமை கொறடா மனோகரன், ப.குமார் எம்.பி, மாநகராட்சி மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, சிவபதி, துணைமேயர் ஆசிக் மீரா, அரியமங்கலம் கோட்ட தலைவர் சீனிவாசன், கவுன்சிலர் பூபதி, கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கார்த்திகேயன், இருக்கை மருத்துவ அதிகாரி டாக்டர் சிவகுமார், மூளை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் எம்.ஏ அலீம், டாக்டர்கள் ராஜசேகர், ரவிக்குமார், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட நர்சுகள் வலிப்புநோய் பற்றிய மூட நம்பிக்கைகள் அகற்றும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர். பேரணி புத்தூர் மெயின்ரோடு, வயலூர் ரோடு, வண்ணார பேட்டை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை அடைந்தது.

No comments:

Post a Comment