Sunday, February 2, 2014

திருச்சி அரசு மருத்துவமனையின் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு விரைவில் திறப்பு

திருச்சி அரசு மருத்துவமனையின் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு விரைவில் திறப்புதிருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவின் கட்டுமான பணிகள் நிறைவடந்த நிலையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும் என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கார்க்குழலி தெரிவித்தார். 
திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த மாகாத்மா காந்தி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கினார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள் விரைவாக நடந்தன. இந்த நிலையில் பணிகள் பெருமளவு முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 
திருச்சி அரசு மருத்துவமனை 660 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் ரூ.55 கோடி செலவில் விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுவின் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்டிடத்தில் மின் இணைப்பு மற்றும் இறுதி கட்ட பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இந்த மாதத்திற்குள் பணிகள் அனைத்து முடிந்து கட்டிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் திறந்து வைக்க உள்ளார். 
இந்த சிகிச்சை பிரிவு தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. தரைதத்தளத்தில் முடநீக்கியல் துறையும், நுண் கதிர் பரிசோதனை பிரிவும் செயல்படும். முதல் தளத்தில் இருதய நோய் துறையும், 2-வது தளத்தில் நரம்பியல் மற்றும் மூளை மருத்துவ துறையும், 3-வது தளத்தில் சிறுநீரக துறையும், 4-வது தளத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சை துறையும், 5-வது தளத்தில் இரைப்பை மற்றும் குடல் நோய் துறையும், 6-வது தளத்தில் புற்றுநோய் சிகிச்சை துறையும் இயங்கும். 6 தளத்திலும் துறைகள் சார்ந்த நோய்களுக்கு அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகிறது. உயர் சிகிச்சைக்காக ரூ.45 கோடியில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன. 
இந்த கட்டிடத்தில் மொத்தம் 440 படுக்கைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள மருத்துவர்களை விட கூடுதலாக டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட தொடங்கியதும் அதி நவீன உயர்தர சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கூடுதலாக வழங்க முடியும். 
திருச்சி அரசு மருத்துவமனையில் 2013-ம் ஆண்டில் உள் நோயாளிகளாக 59 ஆயிரத்து 537 பேரும், புற நோயாளிகளாக 8 லட்சத்து 72 ஆயிரத்து 300 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும் போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். 
பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் பலர் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் என மொத்தம் 20 ஆயிரத்து 803 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. 
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.எஸ்.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். மருத்துவ குழுவினர் ஏற்கனவே ஒரு முறை வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஆய்வு செய்ய விரைவில் வருகை தர உள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் கடந்த ஒரு மாதத்தில் 450 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.அலீம், சூப்பிரண்டு கனகசுந்தரம், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மனோகர் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளை துணை முதல்வர் டாக்டர் அலீம், சூப்பிரண்டு கனகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment