Thursday, March 12, 2026

திருமூலர் சித்தர் பாடல்களில் திருக்குறளின் சாயல்

திருமூலர் சித்தர் பாடல்களில் திருக்குறளின் சாயல்
பேரா.மரு.எம். ஏ. அலீம், மூளைநரம்பியல் நிபுணர்
ஏ. பி .சி மருத்துவமனை, திருச்சி
மேனாள் துணை முதல்வர், துறைத்தலைவர்
துறை பேராசிரியர், மூளைநரம்பியல் துறை
கி. ஆ. பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி
திருச்சி
drmaaleem@hotmail.com - 9944241270
முன்னுரை:
                -------------------------------------------தேவர் குறளும்
                திரு வா சகமும் திருமூலர் சொல்லும்
     ஒரு வா சகமென றுணர்
                                                                                  - ஒவையார் (நல்வழி 40)
 தமிழ் - சைவம் ஆகிய இருப்பெருந்துறைகளில் தலைச்சிறந்த நூற்களாக காலந்தொட்டு கருதப்படுபவை மூன்று, அவை திருக்குறள், திருவாசகம் மற்றும் திருமந்திரமாகும். முத்தமிழ் நூல்கள் இம்மைக்கும், மறுமைக்கும் பயன்படும் தத்துவங்களைக் கொண்டு விளங்குபவைகள்.
 இவற்றில் திருவள்ளுவர் மற்றும் திருமூலர் ஆகிய இருவரின் அறநெறிகள் பற்றிய ஓர் ஒப்பீடு (அட்டவணை 1 ) ஆய்வாக உலக திருக்குறள் மைய திருக்குறள்தூயர் க.மோகனராசு அவர்களின் வழிகாட்டலின் பேரில் இவ்வாய்வுக் கட்டுரையை அமைத்திருக்கின்றேன் .
அட்டவணை 1
பொருள் திருவள்ளுவர் திருமூலர்
தொன்மைகாலம்
 பொ.ஊ.மு 400 - 100 பொ.ஊ.மு 31 பொ.ஊ.மு 5000 திருமந்திரம்1500 3000 ஆண்டு 13 நாட்கள்
ஊர் மயிலாப்பூர் சாத்தனூர்
இனம் தமிழர் 
  ?சமணர்/ இந்து தமிழர்
இடையர் குலம் இந்து
திருமணம் திருமணமாணவர் (வாசுகி) திருமணமாகாதவர்
மொழி தமிழ் தமிழ்
தொழில் புலவர் புலவர் சித்தர்
நூல் திருக்குறள் திருமந்திரம்
காலம் 2000 1500
நூல் தகுதி அற இலக்கியம் சைவசமய படைப்பு
சங்க இலக்கிய தொகுதி பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ஒன்று 12 திருமுறைகளில் ஒன்று
பாடல் வகை வெண்பா கலிவிருத்தம் - யாப்பு
தொகுப்பு மூன்று - அறம் பொருள் இன்பம் காப்பு 1 , 9 தந்திரங்கள்
அதிகாரங்கள் 133 232
பாடல்கள் 1330 3100
காலம்:
திருவள்ளுவர்
கடைச்சங்ககாலப் புலவர் திருவள்ளுவர் பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ.மு 100க்கும் இடைக்காலத்தில் வாழ்ந்தவர் என கருதப்படுகின்றது. தமிழ்ப்பெரும் அடிகள் மறைமலை அடிகளாரின் பகுப்பாய்வுப்படி வள்ளுவன் பிறந்தது பொ.ஊ.மு 31 என்பதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு திருவள்ளுவ ஆண்டையும் தமது அரசு ஆணைகளில் வெளியிட்டு வருகின்றது. இவ்வாண்டு அதன் அடிப்படையில் 2057ம் திருவள்ளுவர் ஆண்டாகும்.
திருமூலர்
 தமிழ் சித்தர்களில் முக்கியமான திருமூலரின் காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என கூறப்படுகின்றது 2 இருப்பினும் இவர் காலம் பொ.ஊ.மு 5000 வருடங்களுக்கு முந்தியது என கூறுகின்றனர். மேலும் இவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவராக இருப்பதாக கூறப்படுகின்றது
பிறப்பு:
தெய்வப்புலவர் திருவள்ளுவரும், சிவயோகி சித்தர் திருமூலரும் பிறப்பால் தமிழர்கள். திருவள்ளுவர் பிறந்த ஊர் மைலாப்பூர் எனவும், திருமூலர் சாத்தனூரைச் சார்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. திருவள்ளுவர், வாசுகி என்பவரை திருமணம் செய்தவர். திருமூலர் திருமணம் செய்யாத சித்தயோகி இவர்களின் இனம் தெரிந்தபோதும் இவர்களது மதம் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. திருவள்ளுவர் சமணர் மதம் என்றும், வைணவ இந்து என்றும் மேலும் சிலர் இவர் மதம் எது எனவும், அவர் வணங்கிய தெய்வம் எது என்பது பற்றி சரியாக அறிய முடியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர். திருமூலர் இந்து மதத்தைச் சார்ந்த இடையர் குலம் எனவும் சிவ பக்தனாக வாழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றார்.
இவர்களது முக்கிய நூல்:
திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய செவ்வலக்கிய நூல் திருக்குறள் என்பதாகும். திருமூலர் 1500 ஆண்டு பழைமை கொண்ட திருமந்திரம் எனும் சைவசமய நூலாகும். இவ்விரு நூல்களும் "திரு" எனும் அடைமொழியுடன் சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
இவர்களது நூல் அமைப்புகள்:
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் நூல் தமிழ் சங்கஇலக்கிய நூல்களின் வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் கீழ் வைக்கப்பட்டு சங்க இலக்கிய நூலாக பெருமை பெறுகின்றது.
திருமூலர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், 12 திருமுறைகளில் 10வது திருமுறையான திருமந்திரத்தை தந்த சைவசமய சித்தராவார்.
தமிழ் பற்று:
திருவள்ளுவர், திருக்குறளை தமிழில் எழுதி இருக்கின்றார். அவர் எழுதிய திருக்குறளில் தமிழ் என்னும் சொல் எந்த பாடலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறளில், 247 தமிழில் உள்ள எழுத்துக்களில் உயிர் எழுத்துக்களில் ‘ஔ’ என்னும் உயிரெழுத்தும், மெய் எழுத்துக்களில் 36 எழுத்துக்களும் மொத்தம் 37 எழுத்துக்கள் இடம் பெறவில்லை. மேலும் தமிழ்நாட்டின் சிறப்பும் ஒரு குறளிலும் தனித்து குறிப்பிடப்படவில்லை. அத்துடன் நூல் எழுதிய ஆசிரியர் பெயரும் ஒரு குறளிலும் இடம்பெறவில்லை. மேலும் 50 க்கும் மேற்பட்ட பிறமொழி சொற்களும் குறள்களில் இடம்பெற்றுள்ளன.
திருமூலரின் திருமந்திரத்தில் பாயிரம், பகுதியில் திருமூலர் தன் வரலாறு பற்றி கூறியுள்ளதுடன்,
என்னைநன்றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன்றாகத் தமிழ்செய்யு மாறே
 (- தி. ம. பா.81)
என தமிழ் என்னும் தம் மொழியின் பெருமையை பதிவிட்டுள்ளார். திருமந்திரத்தில் பரவலாக பிறமொழிச் சொற்கள் ஆகம தொடர்பான சொற்களாக இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் இவ்விருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை பயன்படுத்தவில்லை.
தமிழ் இலக்கியங்களில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் தான்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
 இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
என அமைச்சர் வில்லவன் கோதையின் கூற்றாக அமைந்துள்ளது.
இவர்களது முக்கிய நூல்கள்:
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்
திருவள்ளுவர் எழுதிய நூல் திருக்குறளாகும். இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகின்றது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை ஞான வெட்டியான், பஞ்ச ரத்னம்.
திருமூலர் எழுதிய நூல்கள் திருமந்திரம். இவற்றைத் தவிர பல நூல்கள் இருந்த போதிலும் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. அவை
திருமூலர் காவியம் 8000 , சிற்ப நூல் 1000, சோதிடம் 300, மாந்திரீயம் 600
வைத்தியச் சுருக்கம் 200, காக்கும் ஞானம் 100, சல்லியம் 1000, பெருங்காவியம் 1100, யோகஞானம் 16, காவியம் 1000, திட்டை விதி 100, ஆராதாரம் 64, கருக்கிடை 600, கோர்வை விதி 16, பச்சை நூல் 24, விதி நூல் 18 ஆகும்.
திருவள்ளுவரின் திருக்குறள்:
2000 ஆண்டுகளுக்கும் முன்பாக திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் என்னும் அறநூல் 1330 ஈரடி பாடல்களை ஏழு வார்த்தைகளுக்குள் (முதல் அடி நான்கு வார்த்தைகள் இரண்டாம் அடி மூன்று வார்த்தைகள்) என அறம், பொருள், இன்பம் எனும் முப்பெரும் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட பழமையான தமிழ் நூலாகும். இவற்றில் அறம் என்னும் பிரிவின் கீழ் ஒரு அதிகாரத்திற்கு 10 பாடல்கள் விதம் ஒன்று முதல் 38 அதிகாரங்களில் 380 குறள்கள் உள்ளன. பொருள் என்னும் பிரிவின் கீழ் 39 முதல் 108 அதிகாரங்களும் மொத்தம் 70 அதிகாரங்களில் 700 குறள்கள் உள்ளன. காமத்துப்பாலில் 109 முதல் 133 அதிகாரங்களில் மொத்தம் 25 அதிகாரங்களில் 250 குறள்கள் உள்ளன.
முதல் பிரிவான அறம் ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கக்கூடிய அறநெறிகளையும் தவயோக தத்துவத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.
இரண்டாம் விரிவான பொருள் பிரிவில், ஒருவரின் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அற ஒழுக்கங்களை பொருளாதார, அரசியல் நிர்வாக மற்றும் சமூகம் விழுமியங்கள் பற்றி விரிவாக உள்ளடக்கி இருக்கின்றது.
 மூன்றாவது பிரிவான இன்பம் ஒருவரின் அகவாழ்வு அறநெறிகளை உள்ளடக்கி இருக்கின்றது.
 திருக்குறளில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமைகளை விவரிக்கின்றது. அடுத்த 340 குறள்கள் தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறநெறிகள் பற்றியும், அடுத்த 220 குறள்கள் ஆட்சியாளர்களின் ஒழுக்க நெறிகள் பற்றியும் அடுத்து வரும் 100 குறல்கள் அமைச்சர்களின் அறஒழுக்கங்கள் பற்றியும் அடுத்த 220 குறள்கள் அரச நிர்வாக அறநெறிகள் பற்றியும், அடுத்துவரும் 130 குறள்கள் நேர்மை, எதிர்மறை, சமூக ஒழுக்க நெறிகள் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்பவாழ்வு குறித்த அறநெறிகளையும் சொல்கின்றது.
திருமூலரின் திருமந்திரம்:
திருமூலரின் திருமந்திரம் சைவசமய வழிகாட்டல் நூலாக அறநெறிகளுடன் கூடிய மெய்யியல் கொண்ட ஒரு சைவசித்தாந்தத்தின் முதல் நூலாக கருதப்படுகின்றது.
 இந்நூல் பாயிரம் மற்றும் தந்திரம் என்னும் இரு பிரிவுக்கு கொண்ட நூலாகும். ஒவ்வொரு பிரிவும் தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலில் பாயிரத்துடன் 232 அதிகாரங்களுடன் கூடிய 3000 த்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கின்றது.
பாயிரம் பகுதியில் காப்பு பாடல்களாக 9 தலைப்பில் 1 முதல் 112 பாடல்கள் இருக்கின்றன.
 அடுத்து தந்திரம் பிரிவில் முதல் தந்திரத்தின் கீழ் 113 முதல் 326 வரையிலான 214 பாடல்கள் இருக்கின்றன. இரண்டாம் தந்திரத்தில் 337 முதல் 548 மொத்தம் 212 பாடல்கள் உள்ளன. மூன்றாம் தந்திரத்தில் 549 முதல் 883 வரை மொத்தம் 335 பாடல்களும், நான்காம் தந்திரத்தில் 884 முதல் 1418 வரை மொத்தம் 535 பாடல்களும், ஐந்தாம் தந்திரத்தில் 1419 முதல் 1572 வரை மொத்தம் 154 பாடல்களும், ஆறாம் தந்திரத்தில் 1573 முதல் 1703 வரை மொத்தம் 131 பாடல்களும், ஏழாம் தந்திரத்தில் 1704 முதல் 2121 வரை மொத்தம் 418 பாடல்களும், எட்டாம் தந்திரத்தில் 2122 முதல் 2648 வரை மொத்தம் 527 பாடல்களும், ஒன்பதாம் தந்திரத்தில் 2649 முதல் 3049 வரை மொத்தம் 399 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
பாயிரம்:
இதில் 112 பாடல்களில் 9 அதிகாரங்கள் உள்ளன. இதில் கடவுள் வாழ்த்து குறிப்பாக சிவனின் பெருமை 50 பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அடுத்து மும்மூர்த்திகளின் முறைமையும், அதற்கடுத்து அந்தணர்களின் ஒழுக்கநெறிகள், தகுதி, வேட்டல் ஆகின பற்றியும் அடுத்து திருக்குறளில் சொல்லப்பட்ட அரசாட்சி முறை, வான்சிறப்பு, அறஞ்செய்வான் திறன், அறஞ்செய்யான் திறன், அவையடக்கம் பற்றியும் முடிவில் குருபரம்பரை பற்றியும், கடைசியில் திருமூலர் தனது வரலாற்றையும் கூறுகின்றார்.
முதல் தந்திரம்:
இதில் யாக்கை நிலைமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, உயிரின் நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், பிறர்மனை நயவாமை, மகளிர் இழிவு, நல்குரவு, அன்புடைமை, அன்பு செய்வாரை அறிவான் சிவன், கல்வி, கேள்வி கேட்டமைதல், கல்லாமை, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை பற்றி கூறுகின்றது. இவற்றைப் பற்றி வள்ளுவன் ஏழு வார்த்தைகள் கொண்ட வெண்பாவில் தன் காலத்தே கூறியிருக்கின்றார்.
இரண்டாம் தந்திரம்:
 சிவன் பற்றி கூறியுள்ளதுடன், 436 முதல் 474 வரை உள்ள 39 பாடல்களில் வள்ளுவர் சொல்லாத கருவுற்பத்தி பற்றி கூறுகின்றார்.
மூன்றாவது தந்திரம்:
 யோகம், இல்வாழ், தவநிலை, இறையை (சிவனை) அடையும் வழிமுறைகள் பற்றி கூறுகின்றது.
நான்காம் தந்திரம்:
 இது திருவை தொழுதலின் பெருமை, சக்கரங்களை அமைப்பது பற்றி கூறுகின்றது.
ஐந்தாம் தந்திரம்:
 அறம், பொருள், இன்பம், வீடு, பேறு பற்றி கூறுகின்றது.
ஆறாம் தந்திரம்:
சிவநெறியில் வாழ்பவர்களுக்கு சிவகுருவாக இருந்து ஆட்கொள்ளும் முறைமையை விளக்குகின்றது.
ஏழாம் தந்திரம்:
பேற்று வழிபாடு ஆன சிவலிங்கவழிபாடு, சிவனைத் தமிழில் ஆராதித்தல் என்பது பற்றி கூறுகின்றது.
எட்டாம் தந்திரம்:
இது உடலைப் பற்றியும், அதன் தன்மை பற்றியும், அதன் செயல்பாடுகள் எப்படி என்பது பற்றியும் கூறுகின்றது.
ஒன்பதாம் தந்திரம்:
உயிரின் இயல்பான நிலை, ஐந்தெழுத்து பெருமை, நுனிமை ஐந்தெழுத்து பற்றி கூறுகின்றது.
 ஔவையார் திருமந்திரத்தைத் திருக்குறள், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களோடு ஒப்பிட்டுச் சிறப்பித்துள்ளார்.
 திருமந்திரத்தில் திருக்குறளின்?ஒத்த சாயல்கள் இடம்பெற்றுள்ள விதம் பற்றி இக் இக்கட்டுரை அமைகின்றது.
சித்தர் இலக்கியமான திருமந்திரத்தில் திருக்குறளின் ஒத்த சாயல்கள் பல காணப்படுகின்றன
திருக்குறள் மற்றும் திருமந்திரத்தில் உள்ள ஒத்த அதிகாரத் தலைப்புகள் , சொல்கள் , சொற்றொடர்கள் , கருத்துகள் இருப்பு பற்றி இவ்வாய்வு அமைகின்றது.
ஒத்த அதிகாரத் தலைப்புகள்
திருக்குறளில் அமைந்த 19 அதிகாரத் தலைப்புகள் எதுவும் வேறுபாடின்றி, திருமந்திரத்திலும் ஒத்து அப்படியே காணப்படுகின்றன(அட்டவணை 2).
 திருக்குறளின் அதிகாரப் பெயர்களைப் பெற்றிருப்பினும், திருமந்திரம் சைவசமய ஒழுகும் அவர் தம் சிறப்பியல்புகளைக் கூறும் வகையில் அமைந்திருப்பதாக காணப்படுகின்றது. திருக்குறள் மதங்களுக்கு அப்பால் நின்று அறம் கூறுகின்றது. திருமந்திரம் சமய சிவநெறிகளையும் இணைத்து பொதுவான அறத்தைக் கூருகின்றது.
அட்டவணை 2
எண் திருக்குறள் திருமந்திரம்
1 கடவுள் வாழ்த்து (கு.அ.1) கடவுள் வாழ்த்து (திம.பா 1)
2 கொல்லாமை (கு.அ.33) கொல்லாமை (திம.1.15)
3 புலால் மறுத்தல் (கு.அ.26) புலால் மறுத்தல் (திம.1:16)
4 பிறனில் விழையாமை (கு.அ.15) பிறன்மனை நயவாமை (திம.1:17)
5 நல்குரவு (கு.அ.105) நல்குரவு (திம.1:19)
6 அன்புடைமை (கு.அ.8) அன்புடைமை (திம.1:27)
7 கல்வி (கு.அ.40) கல்வி (திம1:29)
8 கல்லாமை (கு.அ.41) கல்லாமை (திரம.1:31)
9 நடுவுநிலைமை (கு.அ.12) நடுவுநிலைமை (திம.1:32)
10 கள்ளுண்ணாமை (கு.அ.93) கள்ளுண்ணாமை (திரு.1:33)
11 பொறையுடைமை (கு.அ.16) பொறையுடைமை (திம.2:57)
12 பெரியாரைத் துணைக்கோடல் (கு.அ.45) பெரியாரைத் துணைக்கோடல் (திம.2:58)
13 துறவு (கு.அ.35) துறவு (திம.6:119)
14 தவம் (கு.அ.27) தவம் (திம. 6.120 )
15 கூடாவொழுக்கம் (கு.அ.28) கூடாவொழுக்கம் (திம.7:165)
16 புறங்கூறாமை (கு.அ.19) புறங்கூறாமை (திம.8:197)
17 வாய்மை (கு.அ.30) வாய்மை (8:205)
18 அவாஅறுத்தல் (கு.அ.75) அவாஅறுத்தல் (திம.8:207)
19 ஊழ் (கு.அ.38) ஊழ் (திம.9:223)
திருக்குறளின்
அதிகாரம் திருமந்திரத்தில் விரிவாக அமைந்திருப்பவைகள்
திருக்குறளின் ஒரு அதிகாரம் , திருமந்திரத்தில் பல அதிகார பொருளில் சில கூறப்பட்டுள்ளதும் கவனிக்கதக்கது
திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள 'நிலையாமை' (கு.34) அதிகாரம்
 திருமந்திரத்தில்
 யாக்கை நிலையாமை(திம.1.11), செல்வ நிலையாமை(திம.1.12), இளமை நிலையாமை(திம.1.13), உயிர் நிலையாமை (திம.1.14) என 4 வகை அதிகாரமாக பிரித்து கூறப்பட்டுள்ளது .
பெரியாரைப் பிழையாமை (கு.90) என்னும் குறள் அதிகாரம்,
 திருமந்திரத்தில்
 சிவநிந்தை(திம.2.54), குருநிந்தை(2.22), மயேசுர நிந்தை( திம.2.55) என 3 அதிகாரமாக சொல்லப்பட்டிருக்கின்றது.
தவம்(27), கூடா ஒழுக்கம் (28) என்னும் குறள் அதிகாரங்கள்
 திருமந்திரத்தில்
தவ தூடணம்(திம.6.121), அவ்வவேடம்(திம.6.123), தவவேடம்(திம.6.124), ஞானவேடம்(திம.6.126), சிவவேடம்(திம.6.127)
என 5 அதிகாரமாக விரிவாக கூறப்பட்டுள்ளது
கூடா ஒழுக்கம் (கு.28) என்னும் குறள் அதிகாரம்
திருமந்திரத்தில்
கூடாவொழுக்கம்(திம.7.165) , கேடு கண்டிரங்கல் ( திம.7.166)என இரு அதிகாரங்களாக கூறப்படுகின்றது.
 திருமந்திரம் இறைவனைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும்
கூறும் நூலாக இருப்பதால்,
இவ்வாறு சில அதிகாரங்களை விரிவாக எடுத்து கூறுகின்றது
திருக்குறளில் விரிவாக கூறப்பட்ட அதிகாரங்கள்
திருமந்திரம் போன்று, திருக்குறளும் அறிவு குறித்துக், கல்வி(கு.அ.40) கல்லாமை (கு.அ.41), கேள்வி (கு.அ.42), அறிவுடைமை(குடும்ப.அ.43) என பல அதிகாரம் தந்துள்ளது .
மேலும், கேண்மை பற்றி திருக்குறள் கூறும்போது நட்பாராய்தல் (கு.அ.80), தீ நட்பு(கு.அ.82), பழைமை(கு.அ.81), கூடாநட்பு(கு.அ.83) என பல அதிகாரமாக சொல்கின்றது.
வான்சிறப்பு (கு.அ.2), கேள்வி (கு.அ.42), அருளுடைமை (கு.அ.25) ஆகிய குறள் அதிகாரங்கள் எதுவும் மாற்றமின்றி திருமந்திரத்தில், வானச்சிறப்பு (திம.1:23), கேள்வி கேட்டமைதல் (திம.1:30), எனவும்,
 குறளின் அருளுடைமை அதிகாரம் சிறிது மாற்றத்துடன் ஞானம்படுதல் (திம.6:126) என்று கூறப்பெற்றுள்ளது.
 வரைவின் மகளிர் (கு.அ.92) என்னும் குறள் அதிகாரத்தைத் திருமந்திரம் மகளிர் இழிவு (திம.1:18) என்று கூறிப்பிடுகின்றது.
நீத்தார் பெருமை (கு.அ.3) எனும் குறள் அதிகாரம் , திருமந்திரமத்தில் , அந்தணர் ஒழுக்கம் (திம.1:21), எனக் குறிப்பிடுகின்றது.
திருக்குறளின் நட்பு உள்ள இறைமாட்சியை (கு.அ.39) திருமந்திரம், இராசதோடம் (திம.1:22) என கூறுகின்றது.
குறளின் ஈகை (கு.அ.23) அதிகாரத்தைத் திருமந்திரம், தானம் யாருக்குச் செய்ய வேண்டும், யாருக்குச் செய்யக்கூடாது என்பதைப் வேறுபடுத்தி பாத்திரம்(திம.2.49), அபாத்திரம் (திம.2.50) என இரு அதிகாரங்களாக கூறுகிறது.
திருக்குறள் அறத்தை முதன்மையாகக் கூறும் நூலாக இருப்பதாள், வீடுபேறு பற்றி குறிப்பாகக் கூறுகின்றது .
 திருமந்திரம் அறத்துடன் சைவசமய நெறிகளையும் கூறி, வீட்டின்பத்தையும் கூறுகின்றது
திருமந்திரம்,சரியை, கிரியை, யோகம், உடலில், நாடி, சுவாச எண்ணிக்கை, உடல் வெப்ப நிலை,ஞானம், உயிர்ப்புப், பயிற்சி, யோக செய்யும் முறை,கரு உற்ப்பத்தி ஆகியன பற்றி விளக்கமாகக் கூறுகின்றது. ஆனால் திருக்குறளில் இவை தொடர்பான இணையான/ஒத்த குறள்கள் ஏதும் சொல்லப்படவில்லை..
 சொல் ,பொருள், நடை கருத்து போன்ற பிற ஒற்றுமைகள்
ஆதிபகவன்
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு (கு.1)
குறளில் உள்ள கடவுள் வாழ்த்தின் சொல்லும் பொருளும், திருமந்திரத்தில் பல்வேறு வகையில் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. குறளின், ஆதிபகவன் என்னும் சொல் திருமந்திரத்தில் ஆதி (பா.15) என்றும், பகவன் (திம.7.142:1857)என்றும், ஆதிப்பிரான்( திம.1.31:319), வேதப் பகவனார்(திம.8.187:2427) என்றும் குறிப்பிடபடுகின்றன.
"ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற" (திருமந். பா.15) என பாயிரத்திலும்
"படமாடக் கோயில் பகவற் கொன்றீயில...
...படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே" (திம.7.142:1857) என மகேசுவர பூசை அதிகாரத்திலும்
"ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்" (திம.1.31:319) என கொல்லாமை அதிகாரத்திலும்
"அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப்பிரானும்" (திம.8.181:2364) என அறிவுதயம் அதிகாரத்திலும்
"வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்" (திம.8.187:2447)எனமுப்பரம் அதிகாரத்திலும்
பார்க்கமுடிகின்றது.
மலர்மிசை ஏகினான்
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்" (கு. 3)
'மலர்மிசை ஏகினான் என்பது மலர் போன்ற மனத்தில் சென்று இருப்பவன் இறைவன் என்பது பொருள். இததை திருமந்திரம்,
"வள்ளல் தலைவன் மலருறை மாதவன்" (திம.3.113:1531) என புறச்சமய தூசணம் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது
 நிலமிசை நீடுவாழ்வார்
 என மலரைவிட மென்மையான இறைவன் திருவடியை நினைப்பவர் உலகில் நெடிடுநாள் வாழ்வர் என்னும் குறளின் கருத்தை திருமந்திரம்,
"திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம் சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே" ( திம.1.10:138) என உபதேசம் அதிகாரத்தில் குறள் ஒட்டி சொல்கிறது.
 இருள்சேர் இருவினையும் சேரா
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
(கு.5)
இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை எப்பொழுதும் சொல்பவரிடத்து மயக்கத்தைப் பற்றிவரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் வந்தடையாது, என்னும் கருத்தை திருமந்திரமும்,
"ஏறுடை யாயிறை வானம்பி ரானென்று
நீறிடு வாரடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே" (திம.7.142:1862) என மகேசுவர பூசை அதிகாரத்திலும்
"தன்னை யறிந்திடூம் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்
பின்னை வினையைக் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே" (திம.8.206:2611) என ஞானிச்செயல் அதிகாரத்திலும் குறள் ஒட்டி கூறப்படுகின்றது.
தனக்குவமை இல்லாதான்
இறைவன் தனக்கு ஈடு இணை இல்லாதவன் என்பதைத் குறள் 7 'தனக்குவமை இல்லாதான் (குறள், 7) எனச் சொல்வதை , திருமந்திரமும்,
"சிவனொ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொ டொப்பார் இங்கு யாவரும் இல்லை" (திம.பா.5) எனவும்
"தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்" (திம.பா.7)
"ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை" (திம.பா.36)
என கடவுள் வாழ்த்து பாயிரத்தில் இறைவனின் இணையற்ற தன்மையை திருமந்திரம் குறள் வழியில் கூறுகிறது.
அறவாழி அந்தணன்
குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் அறவாழி அந்தணன் (குறள் 8) என்னும் தொடர் திருமந்திரத்தில் அப்படியே கீழ் கண்ட பாடலில் வருகிறது
"பிறவா நெறிதந்த பேரரு லாளன்
........................................
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் (திம.7.138;1803) என திருவருள் வைப்பு அதிகாரத்தில் பதிவாகி இருக்கின்றது.
எண்குணத்தான்
இறைவன் எண்குணங்களையுடையவன் என்பதைக் குறள் 'எண்குணத்தான்' (கு. 9) எனச் கூறும். இதை திருமந்திரமும்
'கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே" (திம.2.24:444) என அனுக்கிரகம் அதிகாரத்தில் குறள் ஒட்டி கூறுகிறது
பிறவிப் பெருங்கடல்
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவடி சேரா தார்" (கு.10)
என்னும் குறள், இறைவன் திருவடியைச் சேர்ந்தோர் பிறவியாகிய பெருங்கடலை கடப்பர் என கூறுவது போல இறைவன் திருவடி,பின்வரும் பிறவியை வேரறுக்கும் என் திருமந்திரம் கீழ் உள்ள பாடல்களில் உரைக்கின்றது.
"பிறவி யறுத்திடும் பித்தன் கண்டீரே" (திம.6.119:1616) என துறவு அதிகாரத்திலும்
"ஒத்துத் திருவடி நிழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே" (திம.5.98:1451) என கிரியை அதிகாரத்திலும்
குறள் பார்த்து கூறுகிறது.
வான்சிறப்பு
 குறளின் இரண்டாம் அதிகாரமான வான்சிறப்பு மழையின் சிறப்பை திருவள்ளுவர்,
"வானின் றுலகம் வழங்கி வருதலான்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று" (கு.11)
என்று மழையை அமிர்தமாக கூறுவார். திருமந்திரமும் இக்கருத்தை மழைநீர் உலகை செழிக்கவைக்கும் பொருளில்,
"அமுதூறு மாமழை நீர்த னாலே" (திம.1.23:248) என வான் சிறப்பு அதிகாரத்தில்
குறிப்பிட்டுகின்றது.
 மழை இல்லை எனில் உழவனின்
 ஏர் ஓட்டம் நின்று நிலவளம் குறைந்து விடும் என்பதைத் குறள்,
"ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்" (கு.14)எனக் கூறுகிறது.
இதை திருமந்திரம், இறை வழிபாடான கோயிலில் பூசைகள் குறைந்தால் மழை வளம் குன்றும் என கூறுகிறது.
"முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னார்க்குத் தீங்குள வாரி வளங் குன்றும்" (திம.2.52:518) என திருமந்திரம் திருக்கோயிலிழிவு அதிகாரத்தில், மழை பற்றிய
குறள் கருத்து சொல்லப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.
மழை பெய்யாவிடில் கடவுளுக்குத் திருவிழா, பூசைகள் நடைபெறாது என்பதைச் 'சிறப்பொடு பூசனை செல்லாது' என குறள் 18 வான் சிறப்பு அதிகாரத்தில் குறிப்பிடும். இதை கருத்தை திருமந்திரமும் சிறப்பொடு பூசனை செய்யும் மக்கள் பெரும் நலங்களைப் பற்றிப்,
"பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும்
. . . . . . . . . . . . .
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே" (திம.5.111:1524) என சத்திநிபாதம்-தீவிரம் அதிகாரத்தில் குறிப்பிடும்.
"சிறப்பொடு பூசனையாவது சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி, மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்" என (திம.7.140:1830) சிவபூசை அதிகாரத்தில் விளக்கமும் திருமூலர் தருகிறார்.
நீத்தார் பெருமை அதிகாரம்
நீத்தார் பெருமை குறள் அதிகாரம் 3, அறம்பூண்டாராகிய துறவியரின் பெருமையை 'இருமை வகை தெரிந்து ஈண்டு அறம்பூண்டார்' (குறள் 23) எனச் சிறப்பிக்கிறது. இதற்க்கு ஒப்ப திருமந்திரமும்
"இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவம்" (திம.6.119:1614) என துறவு அதிகாரத்தில்
குறள் கூறிய 'இருமை' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளது.
 அவ்வாறே "உரனென்னும் தோட்டியான் ஓர்ஜந்தும் காப்பான்' (குறள் 24) என்பதை 'ஆனைகள் ஐந்தும் அடக்கி, அறிவென்னும் ஞானத்திரியைக் கொளுவி' (திம. 8.180:2316) என நின்மலாவத்தை அதிகாரத்தில் திருமந்திரம் கூறுகிறது.
அந்தணர் என்போர் அறவோர்மற்..
குறள் 30 ,அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் என அறவோராகிய துறவியர் அந்தணர் என்பார் வள்ளுவர் .இதை சிறிது மாற்றி,திருமூலர், 'அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டோளர் (திம.1.21:224) என அந்தணரொழுக்கம் அதிகாரத்தில் எழுதி இருப்பார்.
அறச் சிறப்பு
"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு" (குறள்.31) என அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில்
வள்ளுவன் ,அறம் சிறப்பையும் செல்வத்தையும் தருமாதலால் மக்களுக்கு அதைவிட ஆக்கம் தருவது வேறு இல்லை எனக் கூறுவார். இதில் சிறப்பு என்பதற்குப் பரிமேலழகர் வீடுபேறு என உரை தருவார். இதை ஒட்டி, திருமூலர்,
"திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி
யேஆற்றல் வேண்டுஞ்" (திம.1.22:244) என இராச தோடம் அதிகாரத்தில்
குறிப்பிடுவார்.. சிறப்பு என்னும் சொல்லுக்குத் திருமூலர் முத்தி (வீடுபேறு) எனப் பொருள் கூறுவதை இதில் காணமுடிகிறது.
அறச் செயல்கள்
ஒருவர் தம்மால் முடியும் அறச்செயல்களை எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் செய்ய வேண்டும் என்பதைக் ,அறன் வலியுறுத்தல் நான்காம் அதிகாரத்தில்
"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்" (கு.33)
என வள்ளுவர் கூறுவார்
. இதை விளக்கமாகத் திருமூலர் இறைவழிபாடு, பசுவினைக் காப்பது, வறியவர்க்கு உணவு இடுதல், இனியவை பேசுதல் ஆகிய எளிய அறச்செயல்களைப் கோடிட்டு
"யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே"
(திம.1.25:252) என்று அறஞ்செய்வான் திறன் அதிகாரத்தில் கூறுவார்.
 ஒருவன் இறக்கும்போது அவனைத் தொடர்ந்து துணையாக வருவது அவன் செய்த அறச்செயலேயாகும் என்பதை 'அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது, பொன்றுங்கால் பொன்றாத் துணை" (குறள். 36) என வள்ளுவர் கூறுகிறார். இதை திருமூலர்,
"கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே" (திம.1.11:144) என யாக்கை நிலையாமையில் கூறுகிறார்
 துணையாக இருப்பது அறம் எனக் குறள் கூறுவதை அவர் தம் சமயநெறிக்க ஏற்பத் திருமந்திரம், அறமுடன் விரதமும் ஞானமும் என .
சேர்த்து கூறுகிறது.
"வாழ்நாள் வழியடைக்கும் கல்" என்னும் குறள் 38 ன் வள்ளுவன் சொல்லைத், திருமூலர் "வாணாள் அடைக்கும் வழியதுவாமே" (திம.3.65:588) என தாரணை அதிகாரத்தில் குறிப்பிடுவதை காணலாம்.
என்பு
 அன்புடையமை எட்டாவது அதிகாரத்தில் வள்ளுவர் 'என்புதோல் போர்த்த உடம்பு' (குறள். 80) என சொல்லப்பட்டதை திருமூலர் (திம.2.45:432) யாக்கை நிலையாமை அதிகாரத்தில் "என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை" என குறள் ஒட்டி குறிப்பிடுவார்.
எழுமை, ஏழுபிறப்பு
 எழுமை, ஏழுபிறப்பு என்னும் பதினோராவது செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் குறள் 107 சொல்வண்ணம், திருமந்திரத்தில்,
"எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்" (திம.5.111:1523) என சத்திநிபாதம்-தீவிரம் எனும் அதிகாரத்திலும் ,
"என் தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்" (திம.7.143:1876) என அடியார் பெருமை எனும் அதிகாரத்திலும் சொல்லப்படும்
இவ்வாறு ஏழேழ் பிறவி எனும் குறள் சொல்லாட்சி திருமந்திரத்தில் வந்துள்ளதை ஒப்புநோக்கலாம்.
ஆமைபோல்
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்" (குறள். 126)
என்ற உவமையை பதிமூன்றாம் அடக்கமுடைமை அதிகாரத்தில் வள்ளுவர்
கூறுவது போல்,திருமூலர்,
"ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி" (திம.1.10:133) என உபதேசம் அதிகாரத்திலும்
"ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்" (திம.8.170:2158) என அவத்தைபேதம்-கீழாலவத்தை அதிகாரத்திலும்
கூறியிருப்பது திருக்குறளை ஒத்துள்ளதை காட்டுகின்றது.
அருள் உடையவர்
அருளுடைமை அதிகாரம் 25 ல்
அருள் உடையார்க்கு இவ்வுலகில் ஒரு துன்பமும் உண்டாகாது என்பதை "அல்லல் அருளாள்வார்க்கு இல்லை" (கு. 245) எனக் குறள் கூறும். திருமந்திரம் ஒருபடி மேலாக, அருட்செல்வமுடையவர் முன் இறைவனே தோன்றுவான் என,
"அருட்கண் இலாதார்க்கு கரும்பொருள் தோன்றா
அருட்கண்ணு ளோர்க்கெதிர் தோன்றும் அரனே" (திம.7.138:1808) என திருவருள் வைப்பு அதிகாரத்தில் கூறப்படும்
வள்ளுவரின் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதைத் திருமூலர், "புடவை கிழிந்தது, போயிற்று வாழ்க்கை, கொடையில்லை கோளில்லை கொண்டாட்டமில்லை" (திம.1.19:209) என நல்குரவு அதிகாரத்தில் கூறுகிறார் .
இவ்வாறு திருமூலரின் திருமந்திரம் முழுதும் திருக்குறளின் சாயல் படிந்துள்ளதை மிகச் சிறப்பாகக் காணமுடிகின்றது.
முடிவுரை:
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான, திருக்குறளின் தாக்கம் அதற்கு பின் அறியப்பட்ட பொது நூல்களிலும், சமய நூல்களிலும் அதிகம் காணப்படுகின்றன. அதற்கு திருமந்திரமும் விதிவிலக்கல்ல. இதில் சுமார் 19 அதிகாரங்கள் திருக்குறளில் சொல்லப்பட்ட தலைப்புடன் காணப்படுகின்றன. இன்னும் திருக்குறளில் காணப்படுவது போல் சில அதிகாரங்கள், பல அதிகாரங்களாக திருமந்திரத்தில் சில மாற்றங்களுடன் கூறப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளில் காணப்படும் சொல், பொருள் மற்றும் கருத்து ஒப்புமைகள் பல திருமந்திரம் பாடல்களில் காணப்படுகின்றன.
சரிபை, கிரியை, ஞானம், மூச்சுப்பயிற்சி, யோகம் போன்று திருமந்திரத்தில் காணப்படுபவைகள் குறளில் எதுவும் இடம் பெறவில்லை.
திருக்குறளை விட, சைவ சமய ஆகம தொடர்பான கருத்துக்கள் கூறப்படும் திருமந்திரப் பாடல்களில் அதிகமாக பிறமொழிச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன.
  திருமந்திரத்தில் சொல்லப்படும் பாடல்கள், நாடிகள் உடல்கூறியல், உடல் வெப்பநிலை, உயிரின் அளவு, சில மலர்களின் பெயர்கள், உடல் உறுப்புகளின் எண்ணிக்கை, சுவாச எண்ணிக்கை, கர்ப்ப காலம், சுவாச காற்றின் நீளம், போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய பாடல்கள் எதுவும் திருக்குறளில் இல்லை.
திருக்குறளில் மலர்களின் பெயர்கள் அனிச்சம் மற்றும் குவளை (நீலோற்பவம்) ஆகிய இரு மலர்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.
காமத்துப்பாலிலும், விருந்தோம்பல் அதிகாரத்திலும் அனிச்சம் (மோந்து பார்த்தாலே வாடிவிடும் மென்மையான மலர்) உவமையாகவும் மற்றும் குவளை மலர் தலைவியின் கண்கள் மற்றும் அழகை உவமிக்கப் பயன்படுகிறது. காமத்துப்பாலில் (நலம் புனைந்துரைத்தல் அதிகாரத்தில்) தலைவியின் கண்களைக் கண்டால், குவளை மலர்கள் வெட்கப்பட்டுத் தலை கவிழ்த்து நிலத்தை நோக்கும் என, அதன் மேன்மைக்கும் அழகுக்கும் இணையில்லை என வள்ளுவர் உவமைப்படுத்தி உள்ளார்.
திருமந்திரம் சைவசமய நூல் ஆதலால் தாமரை, நீலோற்பவம், கழநீர், நெய்தல், பாக்குப் பூ, மாதவி, மந்தாரை, தும்பை, மகிழம், புன்னை, மல்லிகை, செண்பகம் பாதிர், செவ்வந்தி ஆகிய 14 மலர்கள் இனறவனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்றது என குறிப்பிடுகிறார்.
  மொத்தத்தில் திருக்குறளின் சாயல் பல இடங்களில் திருமந்திரத்தில் காணப்படுகின்றன. இருப்பினும் திருமூலர் கூறிய ஆகம கருத்துக்கள் அதிகம் திருக்குறளில் இல்லை.
மேற்கோள் இடப்பட்டவை
1. திருக்குறள் தெளிவுரை. சு.நடராசன் மணிவாசகர் பதிப்பகம். முதல் பதிப்பு .தி.ஆ. 2056 .ஆகஸ்ட் 2025
2. திருமூலர் அருளிய திருமந்திரம். பிரேமா பிரசுரம்
ஐந்தாம் பதிப்பு. தி. ஆ 2052 .2021
3. சித்தர்கள் கலைக்களஞ்சியம், எஸ். ஆர் சங்கரலிங்கனார் சித்தாசிரமம் .தி.ஆ. 2028.1997
4.க.திலகவதி. அறிவியல் நோக்கில் திருக்குறளும் திருமந்திரமும்.பிரணப் தமிழியல் ஆய்விதழ் தி.ஆ 2053. 2022 ;3(1) : 1-10
5.சி.சுவரமிநரதன் மு. பத்மைரபன் .திருமூலரின் அறிவியல் சிந்தனைகள் .தமிழ் பேராய்வு ஆய்விதழ். திஆ.2054. 2023;11(2):22-32

No comments:

Post a Comment